'பீசீஆர் பரிசோதனைகூட 70சதவீதம்தான் உண்மை'
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
" கொவிட் 19 தொற்று ஓர் உலகளாவிய தொற்றுநோயாகும். கொவிட் 19 வைரஸை கண்டறிய நடத்தப்படும் பீ.சீ.ஆர். பரிசோதனைகளும் 70 சதவீதம்தான் உண்மை நிலையை காட்டுவதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு அந்த தடுப்பூசி இலங்கையில் உள்ள அனைவருக்கும் செலுத்தப்படும்வரை இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியாது. " - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து எவரும் வரவில்லை. சுகாதார வழிகாட்டல்களை மக்கள் எவ்வளவு தூரம் பின்பற்றுகிறார்கள். அவ்வளவுத்தூரம் கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கொவிட் 19 தொற்று ஓர் உலகளாவிய தொற்றுநோயாகும். இதற்கான தடுப்பூசியும் 70 சதவீதமான இதுவரை வெற்றியளித்துள்ளது.கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு அந்த தடுப்பூசி இலங்கையிலுள்ள அனைவருக்கும் செலுத்தப்படும்வரை இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியாது.
பலமாதங்களாக எமது நாட்டில் சமூகத்திலிருந்து எந்தவொரு தொற்றாளரும் கண்டறியப்படவில்லை. பிரெண்டிக்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்து குழுவொன்று வந்ததாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வந்த விமானத்தில் 48பேர் வந்துள்ளனர்.
அதில் இந்தியர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் கொஸ்கொட ஹோட்டல் ஒன்றில் செப்டம்பர் 22முதல் ஒக்டோபர் 20வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.அதற்கு அப்பால் அவர்கள் அனைவரும் மேலும் 14நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதனால் நாட்டில் தற்போது மீண்டும் தலைதூக்கி இருக்கும் கொரானோ தொற்று எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் சுகாதார துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். உறுதியான தகவல் கிடைத்ததும் அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என்றார்.
Related Posts