கிழக்கில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று!

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொடை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவ வேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம் என்று கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் தெரித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருமாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.





பேலியகொடை மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின்பேரில் பலரை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி PCR பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது.





கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 03 பேரும் நிந்தவூரில் 01 பெண்மணியும் பொத்துவிலில் 05 பேருமாக 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.





மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.





அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.





நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.





இன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.





அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.





சுகாதாரத்துறை மட்டும் இவ்விடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ணவேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்." - என்றார்.