உயிரிழந்த நபருக்கு மீண்டும் உயிர் வந்தது எப்படி? நீர்க்கொழும்பில் நடந்தது என்ன?
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
உயிரிழந்துவிட்டார் என வைத்தியர் ஒருவரால் கூறப்பட்ட நபரொருவருக்கு மீண்டும் உயிர்வந்த சம்பவமொன்று நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நீர்க்கொழும்பு மெதபிட்டிபன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவர் சக்கரை நோயால் நேற்று அதிகாலை நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
இதன்போது வெளியார் சிகிச்சைப்பிரிவில் வைத்து அவரை பரிசோதித்த வைத்தியர், குறித்த நபர் உயிரிழந்துவிட்டார் என குறிப்பிட்டார் என நோயாளியின் உறவினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவர் கூறியதாவது.
” சக்கரை அளவு நன்றாகவே குறைந்துவிட்டதால் சுய நினைவிழந்த நிலையிலேயே வீட்டிலிருந்து அவரை எடுத்துசென்றோம். ஓபிடியில் வைத்து வைத்தியர் ஒருவர் பரிசோதித்தார். நான் ரிக்கெட் எடுக்க சென்றேன். பொலிஸ் செல்லுமாறு கூறினர். அங்கு சென்றபோது உயிரிழந்துவிட்டார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனையடுத்து நோயாளியிடம் சென்றேன். அவரின் சடல் பொலித்தினால் மூடப்பட்டிருந்தது. அதனை அகற்றிவிட்டு நான் அழுகும்போது. அவரின் வாய் அசைந்தது. இது தொடர்பில் வைத்தியருக்கு அறிவித்தோம். அதே வைத்தியர் மீண்டும் வந்து பார்த்தார். தற்போது வைத்தியசாலை வார்ட்டில் சிகிச்சைபெற்று வருகின்றார்.” – என்றார்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
Related Posts