‘முள்ளிவாய்க்கால் படுகொலை’யை வீடுகளிலிருந்து நினைவேந்துவோம்

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அரசும் இராணுவமும் அழித்தாலும் எதிர்வரும் மே 18 அன்று 'முள்ளிவாய்க்கால் படுகொலை'யை நாம் வாழும் இடங்களிலும், குடியிருக்கும் குடில்களிலும் நினைவுகூருவோம்."இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான மாவை சோ.சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.





இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-





"இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் இனத்தினதும் விடுதலைக்காகவும், தங்களைத் தாங்களே ஆளுவதற்காகவும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.





கடந்த ஏழு தசாப்த காலங்களில் இந்தப் போராட்டங்களினாலும், அரசுகள் ஏவிவிட்ட இனக்கலவரங்களினாலும், இறுதிப் போராலும் பல இலட்சம் மக்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளனர்; அழிக்கப்பட்டுள்ளனர்.





இந்தக் காலகட்டங்களில் அரசுகளின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினாலும், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கலினாலும் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் பெருவீழ்ச்சியடைந்து வருகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் என்பனவும், தமிழர் தேசத்தினதும், மக்களினதும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.





இவ்வாறானதொரு நிலையில் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை, பண்பாடு, நாகரிகம் இங்கையில் மறுக்கப்படுகின்றது.





அம்மக்கள் அஞ்சலி செய்ய, கண்ணீர்விட்டழுது ஆறுதல் பெற ஆன்மக் கடனாற்றவுள்ள நினைவிடங்களும், சின்னங்களும் அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் ஆன்மத்தையே அழிக்கும் செயற்பாடே கடந்த 12.05.2021 நள்ளிரவில் இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் நடந்தேறியிருக்கின்றது.





முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை இராணுவத்தின் பாதுகாப்புடன் அரசு சிதைத்துள்ளது.





அந்த நினைவிடத்தில் மே 18ஆம் நாள் புதிய நினைவுக்கல் நிலைநிறுத்தவும், அந்நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சிகள் இடம்பெறவும் ஒழுங்கமைப்புக்கள் இடம்பெற்றன. இந்தநிலையில், புதிய நினைவுக்கல்லும் அங்கிருந்து இராணுவம் சூழ்ந்திருக்க அகற்றப்பட்டிருக்கின்றது. அந்த நினைவுக்கல் இப்போது எங்கே? இலங்கை அரசு இத்தனைக்கும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.





தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கின்றது முள்ளிவாய்க்கால் நினைவிடம். இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசிய இனம் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது. அந்த வரலாற்றுத் தீர்மானத்தை எதிர்வரும் மே 18 அன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம். இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்று சர்வதேசமயப்பட்டிருப்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.





முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி கிறிஸ்தவ ஆயர்கள் கொரோனா வைரஸ் தீவிரத்தையும் கடந்து அர்த்தமுள்ள ஆனால் காத்திரமான அறிக்கையின் மூலம் தமிழ்த் தேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை எழுச்சிகொள்ள வைக்கின்றது.





கொரோனா வைரஸ் பல திரிபுகளாகப் பரவி தீவிரமாக உயிர்களைப் பலியெடுத்து வருகின்றது. எமது பிரதேசங்களிலும் பல இலட்சம் மக்களைப் இனப் போரில் பலிகொடுத்துவிட்ட நிலையிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும், உயிர்களைக் காக்கவும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்று நாமே நம்மைப் பாதுகாக்கும் வழிவகைகளைப் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.





எனவே, மே 18 அன்று இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சில் இருத்தி இலட்சியத் தாகத்தை இதயத்தில் நிறைத்து வாழும் இடங்களிலும், குடியிருக்கும் குடில்களிலும் எமது உறவுகளை நினைவு கூர்ந்து மாலை 6 மணிக்கு மணி ஒலி எழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளைப் பாரெல்லாம் பரப்பி நிற்போம் என அழைப்பு விடுக்கின்றோம்" - என்றுள்ளது.