முழு நாட்டையும் முடக்கவும் - 4 மருத்துவ சங்கங்கள் கூட்டாக வலியுறுத்து

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

3 நாட்கள் பயணத்தடை விதிப்பதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது. எனவே, 14 நாட்களுக்கு நாடு முழுவதும் கடும் பயணக்கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் – என்று இலங்கை மருத்துவர் சங்கம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.





இலங்கை மருத்துவர் சங்கம், அரச வைத்தியர்கள் சங்கம், விசேட வைத்தியர்கள் சங்கம் உட்பட நான்கு மருத்துவ சங்கங்கள் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மேற்படி கோரிக்கையை விடுத்தார்.





இதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்களையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





” நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. அரச வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன. இதனால் பிறநோயாளிகளை பராமரிப்பதிலும் சிக்கல்நிலை உருவாகியுள்ளது. நாளொன்றில் 3 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் சமூகத்தில் சுமார் 10 ஆயிரம் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் உணர வேண்டும்.





கொரோனாவை உரிய வகையில் கட்டுப்படுத்தாதால் சில நாடுகளில் சுகாதார கட்டமைப்பு விழுந்தது. அதை நோக்கியே நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, 14 கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து, நாட்டு மக்களை வீட்டுக்குள் வைக்குமாறு நான்கு மருத்து சங்கங்களின் சார்பிலும் அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த முடிவை எடுப்பது கஷ்டம்தான். இருந்தாலும் ஒத்துழைப்பு நல்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.





மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாட்டுமூலம் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தலாம் என கருதமுடியாது. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதிலும் 100 வீத பலனை எதிர்ப்பார்க்க முடியாது.





அதேபோல 3 நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதன் மூலமும் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது. தொடர் ஊரடங்கின்போது இடையில் தளர்வு செய்வதும் ஏற்புடையதாக அமையாது. தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் வெளியேறுவதும் சிக்கலாகவே அமையும். எனவே 14 நாட்களுக்கு நாடு முழுவதும் கடும் பயணக்கட்டுப்பாடுகளை அல்லது ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்.





14 நாட்கள் நாடு முடக்கப்பட்டால் அதன் பின்னர் இயல்பு நிலை திரும்பும் என உறுதியாககூறிவிடமுடியாது. எனினும், ஊரடங்கை கட்டம் கட்டமாக தளர்த்தலாம்.” – என்றார்.