ஐ.நா. ஊழியர்கள்மீதே கை வைத்தது தலிபான் அமைப்பு

World 2 ஆண்டுகள் முன்

banner

ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஊழியர்களைத் தலிபான்கள் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ''காபூல் விமான நிலையத்துக்குத் தப்பிச் செல்ல இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியரைத் தலிபான்கள் விரட்டிச் சென்று தாக்கினர். மேலும், காபூலில் இருந்த இன்னொரு ஐ.நா. ஊழியரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.





மேலும் அங்கிருக்கும் ஐ.நா. ஊழியர்களுக்கு அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். காபூலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள்தான் அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு” என்று தெரிவித்தார்.





எனினும் தலிபான்கள் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை விளக்கம் ஏதும் தரவில்லை.





ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.





இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.





இந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.