'யானை தந்தம் கடத்தல்' - விசாரணை ஆரம்பம்

banner

யானை தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்து, கடத்திச் சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை, இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடந்த சனிக்கிழமை அதிகாலை குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.





கல்முனை ஊடாக திருகோணமலைக்கு பயணம் செய்த தனியார் பேரூந்து ஒன்றில் பயணம் செய்த அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க குமார என்ற சந்தேக நபரே கைதானார்.





விசேட தகவல் ஒன்றினை அடுத்து இராணுவத்தினர் சோதனை சாவடியில் பரிசோதனைகளை மேற்கொண்டு இச்சந்தேக நபரை கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.





இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





சந்தேக நபர் மிகச் சூட்சுமமான முறையில் யானைத்தந்தத்தை இரு பயணப்பையை பயன்படுத்தி எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.சுமார் 2 அடியுள்ள யானைத்தந்தம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது யானை ஏதாவது சுடப்பட்டு பெறப்பட்டதா என பல கோணங்களில் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.