கிளிநொச்சியில் 2 லட்சம் துப்பாக்கி ரவைகள் மீட்பு
கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது சுமார் 2 இலட்சம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கோரக்கன்கட்டு பூங்காவன சந்தியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 13 ஆம் திகதி குழி தோண்டிய போது துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டன.
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நீதிமன்ற அனுமதிக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றும், நேற்று முந்தினமும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காணியிலிருந்து, T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டியில் 750 ரவைகள் என்ற அடிப்படையில் 145 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த பெட்டிகளில் 1,08,750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 78,809 வெற்று ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை தவிர, M-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 800 ரவைகளும், MPMG ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 2400 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோரக்கன்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவு செய்யப்பட்டன.
மீட்கப்பட்ட ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Related Posts