'எனக்கு படிக்க முடியவில்லை' - 10 வயது மகள் முறைப்பாடு! தந்தை கைது!!
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
மது போதைக்கு அடிமையான தந்தை கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு வீட்டில் சண்டையிடுவதால் இம்முறை புலமைப்பரிசில் பரிட்சைக்கு படிக்க முடியாதுள்ளதாக அவரது பத்து வயது மகள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு(119) அழைப்பொன்றை எடுத்து முறைப்பாடு செய்ததை அடுத்து அந்த தந்தையை கைதுசெய்துள்ளதாக அம்பாறை உகண பொலிஸார் தெரிவித்தனர்.
மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு உரத்த குரலில் சத்தமிடுவதால் தனக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கு படிக்க முடியாதுள்ளதாகவும் தந்தை தாயை தாக்குதவதாகவும் 10 வயது மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை மது அருந்துவதால் தனது சகோதரனுக்கும் இளைய சகோதரிக்கும் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மது அருந்த வேண்டாம் என தானும் தனது சகோதரன், சகோதரி மற்றும் தாய் எவ்வளவுதான் கெஞ்சிக் கேட்டபோதும் அவர் தொடர்ந்து மதுவருந்துவதால் பொறுக்கமுடியாமல் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்றை எடுத்து முறைப்பாடு செய்ததாகவும் அந்த பத்து வயது சிறுமி தெரிவித்துள்ளார்.
உகண பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான வங்கி ஒன்றின் பாதுகாப்பு ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். சிறுமியின் முறைப்பாட்டை அடுத்து உகண பொலிஸார் கடந்த 15ஆம் திகதி இரவு இந்த தந்தையை கைது செய்தனர்.அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்வரை இவரை பொலிஸ் நிலைய சகறலகுகூண்டில் தடுத்து வைத்துள்ளனர்.
முறைப்பாட்டாளரான சிறுமியின் தாய் தனது இரு பிள்ளைகளுடன் 16ஆம் திகதி காலை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.இரு சகோதரிகளும் தமது தந்தையை விடுவிக்கும்படி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருணாரத்னவின் முன்னிலையில் அழுதுகொண்டே கெஞ்சிக் கேட்டுள்ளனர்.
சந்தேக நபரின் 7 வயது மகள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் அவரை கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாகவும் தாய் கூறியுள்ளார்.
தனது பத்து வயதான மூத்த மகள் முதலாம் ஆண்டிலிருந்து வகுப்பில் முதலாம் பிள்ளையாக சித்தியடைவதாகவும் அந்தத் தாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகளின் இருதய சிகிச்சைக்காக கொழும்பு செல்ல வேண்டியிருப்பதை கருத்திற்கொண்டு அந்தத் தந்தையை பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் 25ஆம் திகதி அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Related Posts