'புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க முயற்சி' - என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள 'பகீர்' தகவல்கள்

banner

போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்று இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் நிலையம் (என்.ஐ.ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.





2021 மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்திய கடலோரக் காவல் படையினர் சோதனை செய்தனர். அதிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது.





அத்துடன், படகில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றனர் எனவும் கூறப்பட்டது. இவர்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.





இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உளவுப்பிரிவைச் சேர்ந்த சத்குணம் என்ற சபேசனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.





லட்சத்தீவுகள் ஆயுத கடத்தல் சம்பவத்தில் சபேசனுக்கு மிக முக்கிய தொடர்பிருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் லெட்சுமணன் மேரி பிரான்ஸிக் என்ற பெண்ணும் அக்டோபர் 1 ஆம் திகதி தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.





இவர் தொடர்பான வழக்கையும் என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. லெட்சுமணன் மேரி பிரான்ஸிக்குடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், எல்.செல்லமுத்து ஆகியோர் மீது கடந்த ஜனவரி 18-ந் திகதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை இவர்கள் பெற்றுள்ளனர். போலி இந்திய ஆவணங்களை வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கம் செய்யும் முயற்சிகள் இவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பை ஃபோர்ட் கிளையில் பெருந்தொகையான பணத்தை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.