'காணி அபகரிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை'

banner

நாட்டில் எதிர்காலத்தில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.





சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்புள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்த பாதுகாப்புச் செயலாளர் காணி விவகாரத்தில், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வலியுறுத்தினார்.





நாரஹேன்பிட்டியிலுள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், "கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலைமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்க முடிந்தது.





பாதுகாப்பு படைகள், சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் காணப்பட்ட முன்னைய கொரோனா வைரஸ் மூன்று அலைகளையும் எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.