இன்று இலங்கையில் களமிறங்கும் அமெரிக்க இராஜாங்க செயலர்! MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமா?

banner

அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் வருகைக்கும் எம்.சி.சி ஒப்பந்தத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எம்.சி.சி ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணிகளுக்காகவும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது என தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.





"நாட்டின் இறையாண்மையினை கேள்விக்குள்ளாக்கி கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்.சி.சி ஒப்பந்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.





நாட்டின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாகவே எம் .சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டது.





எம்.சி.சி ஒப்பந்தம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணிகளுக்காகவும் எம்.சி.சி. ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தாது. அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் வெளிவிவகார பொது கொள்கையினையை கடைப்பிடுக்கும். எத்தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது." என்றும் அவர் கூறினார்.





அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இன்றிரவு 7.30 மணிக்கு இலங்கை வருகின்றார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.