ஒபாமாவின் கருத்து உண்மையே - தமிழ்க் கூட்டமைப்பு

banner

" இலங்கையில் நடைபெறற் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நா. தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா வெளியிட்ட கருத்து உண்மைதான்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் குழுநிலைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" மனித உரிமை ஆணைக்குழுவானது பிரதான நிறுவனமாக இருக்கவேண்டும். அதன் அதிகாரங்கள் பலப்படுத்தப்படவேண்டும். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஆனால் அதற்கு குறித்த நிறுவனத்தால் கடந்த காலங்களில் தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே , மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படவேண்டும்.





மனித உரிமைகள் பற்றி பேசும்போது, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுக்க ஐ.நா.தவறிவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மனித உரிமைகள் மீறப்படும்போது தற்போதைய ஜனாதிபதிதான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தார் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.  





அதேவேளை, எமது ஆட்சியில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என நாமல் ராஜபக்ச கூறியிருந்தார். பொதுத்தேர்தலின் பின்னராவது விடுவிக்கப்படுவார்கள் என நம்பினோம். அவ்வாறு நடைபெறவில்லை. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. கைதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுங்கள். எம்.பிக்களின் பிணை வேண்டுமெனில் அதனை வழங்குவதற்கு நாம் தயார்." - என்றார்.