'ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகியதை சர்வதேசம் சவாலுக்குட்படுத்த முடியாது'
Politics 3 ஆண்டுகள் முன்
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையிலிருந்து இலங்கை சட்டப்பூர்வமாக விலகிவிட்டது. இதனை எவரும் எந்தவொரு நாடும் சவாலுக்குட்படுத்தமுடியாது. சுயாதீன நாடொன்றுக்கு அதற்கான உரிமை இருக்கின்றது. " - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ உரிய வகையில் எவ்வித அறிவிப்புகளையும் விடுக்காமல் நாட்டில் அரசியலமைப்பைமீறும் வகையிலேயே 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அப்போதைய அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது. இது தொடர்பில் தனக்குகூட அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் ஆட்சிக்குவந்த பின்னர் இணை அனுசரணை விலக்கிக்கொள்ளப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கினார். அதற்கு 69 லட்சம் பேர் ஆணை வழங்கினர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் 6 மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இணை அனுசரணையில் இருந்து விலகுவது தொடர்பில் அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரிய வகையில் அறிவிக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சருடன் நானும் ஜெனிவா சென்றிருந்தேன். எமது நிலைப்பாடு பற்றி ஆணையாளருக்கு உரிய வகையில் தெளிவுபடுத்தப்பட்டது. அரசியலமைப்பைமீறியே நடவடிக்கை இடம்பெற்றுள்ளது எனவும், அதனை சரிசெய்வதற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை பற்றியும் விபரிக்கப்பட்டது. மாறாக தன்னிச்சையாக சர்வதேசத்துடன் மோதும் விதத்தில் நாம் செயற்படவில்லை.
சுயாதீனம்மிக்க நாடொன்றுக்கு எந்நேரத்திலும் உரிய காரணங்களுடன் அறிவிப்பொன்றை விடுத்து விலகிக்கொள்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது. அதனை எவரும் சவாலுக்குட்படுத்தமுடியாது. இலங்கை விலகியபோதுகூட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் கவலை வெளியிட்டனரேதவிர அதனை எதிர்க்கவில்லை. சவாலுக்குட்படுத்தவில்லை." - என்றார்.
Related Posts