பதவி இல்லாததால் ஒப்பாரி வைக்கும் ஆளுங்கட்சி எம்.பிக்கள்
Politics 2 ஆண்டுகள் முன்
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகின்றது. சுயாதீனமாக இயங்க முடியவில்லை எனவும், உரியவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை எனவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர் எனவும் அறியமுடிகின்றது.
இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தாம் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட எஸ்.பி. திஸாநாயக்க,
“ ஆளுங்கட்சியில் மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்தப்படியாக நாடாளுமன்றத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். ஆனாலும் சபையில் பின்வரிசையில் அமர்ந்துள்ளோம். அதிருப்தியால்தான் இவ்வாறு ஒதுங்கியுள்ளோம். கவலை இருந்தாலும் சரித்துக்கொண்டுதான் செயற்படுகின்றோம். நான் வகித்த அமைச்சு பதவிகள் எல்லாம் சாதனை படைத்தவை. விவசாய அமைச்சராக இருந்தேன். பராக்கிரம பாகு மன்னனுக்கு அடுத்தபடியாக விளைச்சல் கிடைத்தது. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது. எனவே, எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமை தவறாகும். இருந்தாலும் அமைச்சு பதவியை கேட்டுபெறப்போவதில்லை.” - என்றார்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன,
“ ஆணமடுவ என்பது இலங்கையிலுள்ள இரண்டாவது பெரிய தொகுதியாகும். இங்கு கப்பம் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் முறையிட்டால் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. எனது கரங்கள் தூய்மையானவை. அரசியல் வெறுத்துவிட்டது. கவலையில்தான் இருக்கின்றேன்.” - என்றார்.
அதேவேளை, அதிருப்திநிலையில் உள்ள ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுகளை மேற்பார்வை செய்யும் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
Related Posts