புதிய அரசமைப்புக்கான பணிகள் நிறைவு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி நிறைவுக்குவந்துள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக உத்தேச வரைபு நகல் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்றத்தின் அவதானம் திரும்பும்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" ஜே.ஆர். யுகத்தில் (1978) உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே நாட்டில் தற்போதும் அமுலில் உள்ளது. 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்காலப்பகுதியில் சமூகத்தில் பல மாற்றங்கள் - முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சமூகத்தின் மாற்றத்துக்கேற்ப அரசியலமைப்பிலும் மாற்றங்கள் இடம்பெறவேண்டும். நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பு என்பது கல்லால் செதுக்கப்பட்டதாக இருக்ககூடாது. நெகிழ்வுத்தன்மை அவசியம்.





அந்தவகையில் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கினார். அந்த பணியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவானது தமது பணியை நிறைவுசெய்துள்ளது. உத்தேச அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.





2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே, 2022 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைக்கும்." -என்றார்.