மூன்றாம் தரப்பை நாடுவது சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும்

banner

“ சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தை இலங்கையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச நிறுவனமொன்று நிராகரித்துள்ள நிலையில், மீளாய்வுக்காக மூன்றாம் தரப்பை நாடுவது பாரிய தவறாகும். அந்த தவறை அரசு செய்யக்கூடாது. அது பயங்கரமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.” - என்று சர்வதேச இராஜதந்திரியும், அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
 
“சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட  சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக இலங்கையிலுள்ள அரச நிறுவனம் (தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம்) ஆய்வுமூலம் அறிவித்துள்ளது. ஒரு தடவைகள் அல்ல இரண்டு தடவைகளுமே நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த அரச நிறுவனத்தில் கற்றவர்களே இருக்கின்றனர்.  
 
எனினும், இலங்கை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவை ஏற்கமுடியாது எனவும், சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பிடம், உரமாதிரிகளை வழங்கி மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் சீன நிறுவனம் அறிவித்துள்ளது. சீன நிறுவனத்தின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கும்பட்சத்தில் அது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.
 
இலங்கையின் நீதி கட்டமைப்புமீது நம்பிக்கை இல்லை, எனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பு ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டால் என்ன செய்வது? ஏற்கனவே, மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆகியன மேற்படி கோரிக்கையை விடுத்துவருகின்றன.
 
எனவே, சீன நிறுவனத்தின் கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.  மேலும் பல பயங்கரமான பிரச்சினைகளில் சிக்கவேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, மூன்றாம் தரப்பு கோரிக்கையை அரசு ஏற்கவேக்கூடாது. அவ்வாறு ஏற்றால் அது இலங்கையின் இறையான்மைக்கும் மரண அடியாக அமையும்.”- என்றார்.