அவசரகால சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு - ஜனாதிபதிக்கு மேலும் நெருக்கடி!
Politics 1 வருடம் முன்
நாட்டில் நேற்று (06) நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி இவ்வாறு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை வளாக போராட்டக்காரர்களை அகற்றுவதற்காகவும், மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவுமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கு தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தனது முடிவை ஜனாதிபதி உடன் மீளப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்.
இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
Related Posts