பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!
Politics 1 வருடம் முன்
பிரான்ஸின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் சட்டமன்றமாகிய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபைக்குத் தலைவராக-சபாநாயகராகப்- பெண் ஒருவர் தெரிவாகியிருக்கிறார்.
பிரான்ஸில் தேசிய சட்டமன்றத்தின் தலைவர்(National Assembly president) பதவி என்பது சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளின் சபாநாயகர்(Speaker) பதவியை ஒத்ததாகும்.
தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று நடைபெற்றது. அச்சமயம் அவையின் தலைவர் தெரிவுக்கான ரகசிய வாக்கெடுப்பில் அதிபர் மக்ரோனின் கட்சியின் (Ensemble) உறுப்பினராகிய ஜாயல் புறுன் பிவே (Yaël Braun-Pivet) புதிய நாடாளுமன்றத்தின் பல கட்சி உறுப்பினர்களால் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 238 வாக்குகளைப்
வென்று தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
51 வயதுடைய ஜாயல் புறுன் பிவே (Yaël Braun-Pivet) பிரான்ஸின் பெண் பிரதமர் எலிசபெத் போர்னின் அமைச்சரவையில் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களுக்கான அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
பிரான்ஸின் Nancy இல் 1970 இல் பிறந்த அவர், 1930 இல் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்து பிரான்ஸில் குடியேறிய யூத இனப் பூர்வீகம் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.
திருமணமாகிய அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
ஒரு குற்றவியல் சட்டவாளராக விளங்கிய போதிலும் அவர் தன்னார்வ அடிப்படையில் வறியவர்களுக்கு உணவூட்டும்"Resto du Coeur" என்ற தொண்டு உணவக நிறுவனத்தில் இணைந்துசேவையாற்றிவந்தார். சோசலிஸக் கட்சியின் நீண்டகால ஆதரவாளரான அவர் பின்னர் 2017 இல் மக்ரோனின் En Marché இயக்கத்தில் இணைந்து அரசியலில் பிரவேசித்திருந்தார்.
அரசியலில் எவ்வித அனுபவமும்
இல்லாதவராக 2017 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட அவர் பாரிஸின் புறநகராகிய Yvelines தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். மக்ரோனின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்தில் சட்டக் குழுவின் தலைமைப் பதவி உட்படப்
பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அவர், மிகக் குறுகிய காலத்திலேயே சபாநாயகர் ஸ்தானத்துக்கு உயர்ந்துள்ளார்.
"நாடாளுமன்றம் நாட்டின் முகம் போன்றது. அது விவாதங்கள் புரியும் இடம். சண்டை செய்யும் களம் அல்ல. ஒன்றிணைந்து செயற்படவே நாட்டுமக்கள் எங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்" என்று
நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜாயல் புறுன் பிவே அவையில் கூறியிருக்கிறார்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
Related Posts