தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் - 21 ஆம் திகதி காத்திருக்கும் அதிரடி நகர்வு!

Politics 1 வருடம் முன்

banner

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகள் இணைந்து, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.





குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.





விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹல உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் இணைகின்றன.





இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றிரவு கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே கூட்டணி தொடர்பான விவரத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரையும் புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன, எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் புதிய கூட்டணியில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியிருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சுதந்திரக்கட்சி தனிவழி செல்வதற்கான சாத்தியமே அதிகம் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், தேர்தல் கால கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டும் சாத்தியம் உள்ளது.





டிரான் அலஸ் மற்றும் அதாவுல்லாவின் கட்சிகள் ஆரம்பத்தில் 10 கட்சி கூட்டணியில் இருந்தாலும், தற்போது அரசுக்கு ஆதரவளித்து கூட்டணியிலிருந்து விலகிவிட்டன.





மொட்டு கட்சி மறுசீரமைப்பு





இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் மறுசீரமைக்கப்படவுள்ளது. இதன்படி கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும், பஸில் ராஜபக்ச ஆலோசகர் மட்டத்தில் செயற்படுவார் எனவும் தெரியவருகின்றது.





டலஸ் ஆதரவு அணி உறுப்பினரான பீரிஸிடமிருந்து பறிக்கப்படும் தவிசாளர் பதவி, கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.





மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான குழுவொன்று இதற்கான வியூகத்தை வகுத்து வருகின்றது.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், 9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிவடையும்வரை பொதுத்தேர்தலை நடத்துவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே ஆளுங்கட்சி உள்ளது. எனவே, முதலில் உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்படலாம். அதற்கான கால எல்லை தொடர்பில் ஆராயப்படுகின்றது.