'பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமே இருக்க வேண்டும்' - திருத்தப்பட்ட சட்டமூலம் முன்வைப்பு
Politics 1 வருடம் முன்
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், குறித்த சட்டமூலத்தை முதலாம் வாசிப்புக்கென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சபையில் முன்வைத்தார்.
22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியாகியிருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட சட்டமூலமும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் எவருக்காவது ஆட்சேபனை இருந்தால், அது தொடர்பில் 7 வேலை நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.
மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு தெரியப்படுத்துவார்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய சட்டத்தை திருத்தி, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதே அரசின் எதிர்பார்ப்பாகும்.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் இருந்த முக்கிய சிறப்பு அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதேபோல விசேட சில ஏற்பாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு சட்டமூலம் வர்த்தமானியில், வெளியான பின்னர், அதனை சட்டரீதியாக உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 7 நாட்களே வழங்கப்பட்டுவந்தது. அது 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக 14 நாட்களாக்கப்பட்டுள்ளன.
அமைச்சு பதவியை வகிப்பவர், பதவி விலகினால், அமைச்சின் செயலாளர் பதவியும் வலுவிழக்கின்றது. இதனால் அரச சேவை ஸ்தம்பிக்கின்றது. எனவே, அமைச்சர் பதவி விலகினாலும், புதியவர் நியமிக்கப்படும்வரை, பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் செயலாளருக்கு வழங்கும் ஏற்பாடு 22 இல் உள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு கட்சி மற்றும் சிறு கட்சிகளின் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தொடர்பில் கட்சிகளே முடிவெடுக்கலாம். இதுவிடயத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சபாநாயகரின் கண்காணிப்பின்கீழ் பணி இடம்பெறும்." - எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி ஆளுநர் நியமனத்துக்கு, அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை ஜனாதிபதி பெற வேண்டும். 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் இந்த ஏற்பாடு இருக்கவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிப்பதற்கு 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அந்த ஏற்பாடு அவ்வாறே தொடரும்.
ஜனாதிபதி பதவியை வகிப்பவர், அமைச்சராக எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிராக அடிப்படை உரிமை வழங்கு தாக்கல் செய்யும் ஏற்பாடு 22 இற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
Related Posts