இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் அவர்களைக் கொலை செய்தவன் யார்?

banner

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இரண்டாயிரம் நாளைக் கடந்து செல்கின்ற நிலைமையில் கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் மாபெரும் போராட்டம் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டது.





கடத்தப்பட்ட மற்றும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அவர்களுடைய உறவுகள் கடந்த 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த காலம் முதல் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்





இவ்வாறான பின்னணியில் தமக்கான நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்து சர்வதேச நீதியை வேண்டி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொடர் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று இரண்டாயிரம் நாளை எட்டியுள்ளது.









இந்நிலையில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





இந்தப் போராட்டமானது கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி டிப்போ சந்தி வரை பேரணியாகச் சென்றது.





இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், 'எங்கே எங்கே உறவுகள் எங்கே?', 'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,' 'வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்', 'இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?', 'உங்கள் இராணுவத்தை நம்பிக் கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டனர்?, 'கொடுப்பனவுகளைக் கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவா?', 'கொலைசெய்த தரப்பால் நீதி வழங்க முடியுமா?', 'எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது?' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.





இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்