தாய்வான் விவகாரம்! அமெரிக்கா, சீனா இடையே போர் மூளுமா?
Politics 1 வருடம் முன்
ஜனநாயக காவலாளி என அமெரிக்க ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் விழிக்கப்படும் அமெரிக்க நாடாளமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அம்மையாரின் தாய்வான் விஜயத்தை ஏற்கனவே பகிரங்கமாக கண்டித்த சீனா, தைப்பேயில் அவர் நடந்துகொண்ட விதம், சந்தித்த பிரமுகர்கள், அவர்களுடன் நடத்திய உரையாடல்கள் என்பவற்றால் மேலும் சீற்றமடைந்து தாய்வானை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாக இறங்கியது.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தாய்வானை இலக்காகக் கொண்டு, அதனை மீண்டும் தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து விடவேண்டும் என்கிற நோக்கில் சீனா பாரிய காய்நகர்த்தல்களை மேற்கொள்வதும்,அதனை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எதிர்த்து வருவதும் கண்கூடு. தாய்வானை தனது பிரதேசமாக உரிமை கோரும் சீனா, தாய்வான் அரச அதிகாரிகளின் வெளிநாட்டு அரசாங்கங்களுடனான தொடர்பையும் ஈடுபாட்டையும் வெளிப்படையாகவே எதிர்க்கிறது.
ஆனால் தாய்வான் மீதான சீனாவின் ‘ஒரே சீனா’ கொள்கையை எதிர்க்கும் அமெரிக்க நிர்வாகம், தாய்வான் தலைநகர் தைபேயில் உள்ள அரச அதிகாரரிகளுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறது.
அந்தப் பிராந்தியத்தில் ஓர் போர் மூளுமானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இன்று கூடுதலான மக்களின் கைகளில் உலாவரும் கைத் தொலைபேசிகள், குறிபாக ஸ்மார்ட்போன்களை(smartphone) இயங்க வைக்கும் சிப்கள் (chip), உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் (computers) இயங்க வைக்கும் செமிகொண்டக்டர் சிப் (semiconductor chip) என்பனவற்றின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழ்வது தாய்வான் ஆகும்.
இன்றைய நவீன வாகனங்கள் குறிப்பாக கார்கள் அனைத்தும் இயங்குவதற்கு இந்த செமிகொண்டக்டர் சிப்பின் தொழில்நுட்பம் அவசியமாகிறது. இது தவிர, சிறுவர்கள் உலகிற்கு அத்தியாவசியமாகி வரும் வீடியோ கேம்கள் உட்பட பல மின்னணு சாதனங்கள் செயல்படுவதற்கும் இந்த சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் இன்றைய அனைத்து வாகனங்களிலும் power steering, brake sensor, air bags மற்றும் parking camera போன்ற நவீனங்களான இன்றைய அத்தியாவசியங்கள் இயங்குவதற்கும் இந்த செமிகொண்டக்டர் சிப்கள் அவசியமாகின்றன. இந்த சாதனங்கள் இல்லாமல் இன்றைய வாகனங்களை தயாரிப்பது சாத்தியமற்றது.
வாகனங்கள் மட்டுமின்றி, நவீனங்கள் அனைத்துடனும் இணைக்கப்பட்ட, சிறப்பு அம்சங்கள் அனைத்திற்கும் இந்த சிப்களே பயன்படுத்தப்படுகின்றன. தாய்வானில் தயாரிக்கப்படும் இந்த செமி-கண்டக்டர் சிப்கள் அமெரிக்கா உட்பட உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செமிகண்டக்டர் சிப்கள் இல்லாததால் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,
தற்போதைய நிலைமையில் தாய்வான் விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்க- சீன போர் முண்டால் கணினிகள், வாகனங்கள், மொபைல் போன்கள் என்பவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு , இறுதியில் அவை விலை அதி உச்சத்தைத் தொடலாம்.
2020ம் ஆண்டு தரவுகளின்படி, உலகின் மொத்த செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் தாய்வான் 63 சதவீதத்தைக் கொண்டுள்ளது எனவும் தாய்வானின் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான Taiwan Semiconductor Manufacturing Company, (TSMS) மட்டும் உலகின் 54 சதவீத குறைகடத்தி சிப்க்களை உற்பத்தி செய்கிறது எனவும் தெரியவந்துள்ளது..
அமெரிக்க விமானப்படை அதன் கொடிய F-35 போர் விமானத்தில் பயன்படுத்தும் கணினி சிப்கள் (computer chips), தாய்வான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்திலேயே தயாரிக்கப்பட்டன என்பதும், தாய்வான் தயாரிக்கும் உயர் தொழில்நுட்ப இராணுவ தர சிப்க்கள் (Hi-tech Military Grade Chips) அமெரிக்க இராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்வான் விவகாரத்தை முன்னிறுத்தி போர் ஒன்று ஏற்படுமானால் அமெரிக்க படை நடவடிக்கைகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா இவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரை போரை விரும்பாது எனவே எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பலத்த எதிர்ப்பையும் மீறிய, அதன் கோபத்தை அதிகரித்த வைத்த தாய்வானுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்ட நான்சி பெலோசி அம்மையார் ‘ஜனநாயகத்திற்கான அமெரிக்க அர்ப்பணிப்பு மிகக் கடுமையாக உள்ளது’ என்கிற கருத்து வெளிப்படுத்தலுடன் அங்கிருந்து
வெளியேறியிருந்தார்.
Related Posts