பின்வாங்க தயாரில்லை - இறுதிவரை போராடுவோம்! உக்ரைன் ஜனாதிபதி சூளுரை
Politics 1 வருடம் முன்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைனை பாதுகாக்க இறுதி வரை போராடுவோம். நாட்டைப் பாதுகாக்கும் போரில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கோ அல்லது சமரசங்களுக்கோ இடமில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்தார்.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்றதன் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மிகவும் உணர்வுபூர்வமாக பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று கூறினார்.
நாங்கள் ஆறு மாதங்களாக கடினமான போரை எதிர்கொண்டு வருகிறோம். எங்கள் மீது திணிக்கப்பட்ட போரை எதிர்த்து, எங்கள் விதிக்காக நாங்கள் போராடுகிறோம். இந்தப் போரில் நாங்கள் அதிகம் இழந்துவிட்டோம். இத்தனை இழப்புகளின் பின்னர் போரைக் கைவிட எந்த உரிமையும் எங்களுக்கு இல்லை. உக்ரைனை அபகரிக்க முயலும் பயங்கரவாதிகளை இறுதிவரை எதிர்கொள்வோம் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
பெப்ரவரி 24 அன்று அதிகாலை 4 மணிக்கு எங்கள் மீது போர் தொடுக்கப்பட்டது. எங்களின் மறு சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுகிறோம். இந்தப் போரை கண்டு நாங்கள் அஞ்சவோ, அழவோ, அலறவோ இல்லை. தப்பியோடவில்லை. விட்டுக் கொடுக்கவில்லை.
நாங்கள் பயத்தின் காரணமாக பேச்சுவார்த்தை மேசையில் அமர மாட்டோம். எங்கள் தலையில் துப்பாக்கியை வைத்து பேச்சுவார்த்தை மேசையில் இருத்தி வைக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இழந்த எங்கள் தேசத்தின் பகுதிகளை மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
கிழக்கில் உள்ள தொழில்துறை டான்பாஸ் பிராந்தியத்தியம், 2014 இல் ஆக்கிரமித்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா உட்பட இழந்த அனைத்து உக்ரைன் பிரதேசங்களையும் மீண்டும் நாங்கள் கைப்பற்றுவோம் எனவும் உக்ரைன் ஜனாதிபதி சபதம் செய்தார்.
Related Posts