'பட்டினி போராட்டம்' வெடித்தால் நாடு அராஜக நிலைக்கு செல்லும்!

banner
பட்டினி மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுக்கின்றோம்."

இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" உணவு மற்றும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல உண்ண உணவில்லாததால் மாணவர்கள் பாடசாலைகளில் மயங்கி விழுகின்றனர் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றர். தமது பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்க வீட்டிலே ஒன்றும் இல்லையென தாய்மார் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே, இந்நிலைமையை மறைப்பதற்கு எவர் முற்பட்டாலும், உணவு மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால்தான் கடந்த ஏப்ரலில் மக்கள் போராட்டம் ஆரம்பமானது.

உணவு மற்றும் மருந்துகளில்தான் மனித இருப்பு தங்கியுள்ளது. இவை இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாத நிலை உள்ளது. எனவே, மருந்து இல்லாதமல் பெற்றோர் உயிரிழந்தால் பிள்ளைகள் கொதிப்படைவார்கள். உணவு இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தால் பெற்றோர் கொதிப்படைடவார்கள். அந்த போராட்டங்கள் பயங்கரமானவையாக இருக்கும்.

அதேபோல நாடு அராஜாக நிலைமைக்கும் செல்லும். இருப்பவர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்படலாம். கொள்ளை அடிக்கப்படலாம். கடைகள் உடைக்கப்படலாம். எனவே, மக்களை ஒடுக்க வழி தேடாமல், பிரச்சினைகளுக்கு தீர்வு தேட வேண்டும்." - என்றார்