கடற்றொழிலுக்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதிக்கு அனுமதி

banner
நாட்டில் சில உபகரணங்கள் மற்றும் இயந்திராதிகளுக்கு இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதும் கடற்றொழிலுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் அனுமதியை பெற்றுக் கொண்டு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

2022 -13 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி சட்டத்தின் கீழ் பெருமளவிலான பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கடற்றொழிலுக்கு உபயோகப்படுத்தப்படும் உபகரணங்களும் இயந்திரங்களும் உள்ளடங்குகின்றன. அவ்வாறு மீனவர்களுக்கு அவசியமாக தேவைப்படும் உபகரணங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கிணங்க உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அந்த வகையில் வெளிநாடுகளின் உதவிகளைப்பெற்றுக் கொண்டு மேற்படி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான உபகரணங்களை மானிய அடிப்படையில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.