உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உலகம் ஏற்காது!

Politics 1 வருடம் முன்

banner
“இலங்கையில் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா செயற்படும்.”

– இவ்வாறு ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பான வரைவு மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திர மணிபாண்டே தெரிவித்தார்.

அத்துடன், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் குறித்த தனது உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ் மக்களின் சமத்துவம் – நீதி – கௌரவம் – அமைதி – ஐக்கியம் ஆகிய அபிலாஷைகளுக்கு ஆதரவளித்தல், இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளித்தல் என்ற இரு அடிப்படைக் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வு, மாகாண சபை தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் குறித்த இலங்கை அரசின் உறுதிமொழிகளை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம்.

இது தொடர்பான முன்னேற்றம் போதுமானதல்ல என நாங்கள் கருதுகின்றோம். இதனடிப்படையில் இந்த உறுதிமொழிகளை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து அர்த்தபூர்வமாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அருகில் உள்ள அயல்நாடு என்ற அடிப்படையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்தியா பெருமளவு உதவிகளை வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரிக்குப் பின்னர் இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், இந்தியா முன்வந்து முன்னர் ஒருபோதும் இல்லாத உதவிகளை வழங்கியுள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதும் இலங்கையில் தமிழ் மக்களின் கௌரவம் அமைதி மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றுக்கான நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்” – என்றார்.