உகண்டாவுக்கு விமானங்களில் எடுத்து செல்லப்பட்டதாகக் கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
அவ்வாறு முடியாவிட்டால் தான் கூறியது பொய்யென்பதை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், அதுவரையில் தாம் ஓயப்போவதில்லை எனவும் அவர் சூளுரைத்தார்.
அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
' அமெரிக்காவின் வரிக்கொள்கையை எதிர்கொள்வதற்குரிய திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை. மாறாக ராஜபக்சக்களை விமர்சித்துக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே முற்படுகின்றனர்.
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு நாம் அழுத்தங்களை பிரயோகிப்போம். கைது பயத்துக்கு அஞ்சி நாம் அமைதி காக்கப்போவதில்லை." எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை பயன்படுத்தி, ராஜபக்சக்கள் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ளனர் எனக் கூறப்படும் பணத்தை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும். அதற்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அதுவரை ஓயமாட்டோம்." - எனவும் நாமல் மேலும் குறிப்பிட்டார்.