அவுஸ்திரேலியாவில் இருந்த இலங்கை உட்பட நாடுகளின் அகதிகளுக்கு கிடைத்த அதிஷ்டம்!
அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து, மனுஸ்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 38 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்படுகின்றனர்.
தற்போது, அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படக் கூடிய 38 அகதிகளில் 15 பேர் ஜூன் 26 அன்றும், 23 பேர் ஜூலை 2 அன்றும் அமெரிக்காவுக்கு பயணமாகியதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை, மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த 580 க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக ஐன் ரிண்டோல் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்த வழிவகை செய்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.
கடந்த மாதம், ஒப்பந்தம் குறித்து அவுஸ்திரேலிய அரசு வெளியிட்டிருந்த கருத்தில் 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தவது என்ற எண்ணிக்கையை முழுமையாக எட்டுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்திருந்தது.
அதே சமயம், மீள்குடியேற்றத்திற்கான வாய்ப்புகளின்றி சுமார் 1000த்திற்கும் அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இன்றும் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.