உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் பகுதியில் கடந்த 1977-ஆம் ஆண்டில் அணு மின் நிலையம் திறக்கப்பட்டது.
கடந்த 1986-ம் ஆண்டில் அந்த அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கதிர்வீச்சால் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 4,000 பேர் வரை உயிரிழந்ததாகவும் சுமார் 50 லட்சம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்டில் உக்ரைன் தனி நாடாக உதயமானது. தற்போது உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் செர்னோபில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் செர்னோபில் அணு மின் நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாடுகள் எச்சரித்து உள்ளன.
இந்த சூழலில் செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்ய ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதிஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
“ செர்னோபில் அணு மின் நிலையத்தின் 4-வது உற்பத்தி பிரிவின் மீது ரஷ்ய இராணுவத்தின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் கதிர்வீச்சை தடுக்கும் தடுப்பு சேதமடைந்திருக்கிறது" என்று அப்பதிவில் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “அணு மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஒருபோதும் தாக்குதல் நடத்தாது.
செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துகிறார். இது மிகப்பெரிய சதி. இந்த சதி திட்டத்தை உக்ரைன் அரசு அரங்கேற்றுகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.