"உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, தமது நாட்டு படைகளை அங்கு நிறுத்தி வைப்பதற்கு தயாராக உள்ளோம்." என்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சு மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் உள்ளிட்டோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
" உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு என்பது, ஐரோப்பாவின் பாதுகாப்பை போன்றது. எனவே உக்ரைனில் அமைதியை நிலை நிறுத்த, தேவைப்படும் பட்சத்தில் எங்கள் நாட்டுப் படைகளை அங்கு களம் இறக்கத் தயாராக இருக்கிறோம்." என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.