பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து வருகின்றனர்.
இது ஏற்கனவே இப்பகுதியில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது.
‘மோடி பதுங்கு குழிகள்’ என பிரபலமாக அறியப்படும் இவற்றில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே நிலத்தடியில் பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன.
பூஞ்ச் மற்றும் ரஜவுரி உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தனிநபர் மற்றும் சமூக பதுங்கு குழிகளை கட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை மத்திய அரசு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடியின் 2-வது ஆட்சியின்போது இத்தகைய பதுங்கு குழிகள் அதிக அளவில் கட்டப்பட்டன.
ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜவுரி ஆகிய 5 மாவட்டங்களில் 14,460 பதுங்கு குழிகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. பின்னர் ஆபத்து அதிகம் உள்ள அனைத்து பகுதிகளிலும் பதுங்கு குழிகளை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.