இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள்தான். அது நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய அணுசக்தி பேரழிவாக மாறி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்பவர்கள், அணு ஆயுத பயன்பாடு கொண்டவர்களுடன் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த இரு நாட்டு தலைவர்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த பணியை செம்மையாக செய்த அமெரிக்க அரசு அதிகாரிகள், நிர்வாகிகளை பாராட்டுகிறேன். உலக அளவிலான மோதலை அமெரிக்கா தனது தலைமை பண்பு மற்றும் இராணுவ சக்தியால் தடுத்துள்ளது.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பஹல்கம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா அழித்தது.
தொடர்ந்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மேற்கொண்டது. அதை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பும், ராணுவமும் முறியடித்தது. அதன் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.