ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது.
இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் இன்று ஏழாவது நாளை எட்டியது. இந்த நிலையில், வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று தெரிவித்துள்ளது.
கேசிஎன்ஏ தனது அறிக்கையில், ‘வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார்.
மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது "மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம்" என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்கும் புற்றுநோய் போன்ற அமைப்பாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளியாகவும் இருப்பதை தெளிவாக நிரூபிக்கிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்’ என்று தெரிவித்துள்ளது.
1973-ல் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய வட கொரியாவும் ஈரானும் தங்கள் ஆயுதத் திட்டங்களுக்காக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது என்றும், வடகொரியா மற்றும் ஈரான் ஆகியவை உக்ரைனுக்கு எதிரான அதன் போரை ஆதரிக்க ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன என்றும் யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுடனான தனது பொறுமை ஏற்கெனவே முடிந்து விட்டது என்று கூறிய நிலையில், வட கொரியா இத்தகைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.