அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உடா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.
இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலை சம்பவத்தை அடுத்து உடா பல்கலைக்கழகத்துக்கு வரும் 15-ம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்த பொலிஸார் அவரை விடுவித்துவிட்டனர். கொலையாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
31 வயதான சார்லி கிர்க் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பழமைவாத சிந்தனையாளர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சில காலம் தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
சார்லிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே நீண்ட நட்பு உள்ளது. 2016 முதல் இந்த நட்பு மிகவும் வலுவானது. ஒரு முறை சார்லியை ட்ரம்ப் ‘ஒளியின் போராளி’ என்று புகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ட்ரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார்.
சார்லி, சர்வசாதாரணமாக வெள்ளை மாளிக்கைக்குச் சென்று ட்ரம்ப்பை சந்திக்கக் கூடியவர். அண்மையில், ட்ரம்ப்புடன் அவர் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்ட வீடியோக்கள் வைரலாகின.