உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வைப்பதற்குரிய முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
போரை நிறுத்தும் முயற்சியின் மற்றுமொரு அங்கமாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.
ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இன்று டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும், ரஷ்ய ஜனாதிபதி புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.