போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தினசரி இடம்பெற்று வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகள் நீடித்த காசா போரில் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆறு உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டிபருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதலில் 241 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது மாத்திரமன்றி மேலும் 619 பேர் காயமடைந்திருப்பதோடு இடிபாடுகளில் இருந்து 528 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தள்ளது.
இதன்படி காசாவில் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தைத் தாண்டி 69 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1லட்சத்து 70 ஆயிரத்து 960 பேர் காயமடைந்துள்ளனர்.