மத்திய கிழக்கில் போர் 21ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் சேதமடைந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் ஈரானின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் எரிசக்தித் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது.
வியாழக்கிழமை (மார்ச் 19) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு, மின் இணைப்புகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன.
தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் ஏலி கோஹன், சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் அதன் சிதறல்களே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.