உலகம் இன்று விஞ்ஞானத்தினால் தத்தெடுக்கப்பட்டதாக தன்னை கற்பனை செய்துகொண்டாலும் சில இயற்கையின் விதிகளை மாற்ற முடியாது. இயற்கையின் இயங்கியல் என்பது மாற்ற முடியாதது. அந்த இயற்கையில் சகலதும் அடங்கும்.கூர்ப்பினால் உருவான உயிரினங்கள் அனைத்தினது இயல்புகளும் இதில் அடங்கும். அந்தவகையிலானதொரு ஆச்சரியமிக்க விடயத்தைத்தான் இந்த தகவல் கட்டுரை தருகிறது.
உயிரினங்களில் நாய்களின் பண்பு எப்போதும் விதந்தோந்தப்படுவது அனைவருக்கும் தெரியும். “நன்றியுள்ள மிருகம்” என்று மனித குலத்தினால் நாய் என்ற மிருகம் காலத்துக்கு காலம் அதன் பண்புநிலை சார்ந்து ரொமான்டிஸைஸ் பண்ணப்பட்டாலும், நாயின் இயற்கையான – அதிசயிக்கத்தக்க – பண்பு அதுகொண்டுள்ள மோப்ப சக்தி. அதற்காக நாயின் நன்றியுணர்வையோ, அது மனிதனோடு கொண்டுள்ள நெருக்கத்தையோ மறுக்கவில்லை. விஞ்ஞானபூர்வமாக அந்த பிணைப்பும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், நாயின் மோப்ப சக்தி விஞ்ஞானபூர்வமாகவும் அதிசயக்கத்தக்க படிநிலைகளை கொண்டது. உயிரினங்களில் மனிதன் எவ்வாறு சிரிக்கும் விலங்கு என்று வித்தியாசப்படுத்தப்படுகிறானோ, அதுபோல நாயும் மோப்ப சக்தியென்ற தனிப்பண்பினால் வித்தியாசமானது.
இந்த மோப்ப சக்தியை முதலீடாகக்கொண்டு நாயை பல்வேறு தேவைகளுக்காக மனிதன் பயன்படுத்துகிறான். வாசத்தினால் உய்த்தறியும் அதன் சக்தியின் வழியிலாக விமான நிலையங்களில் நிற்கின்ற நாய்கள் சட்டவிரோத பொருட்களை கண்டுபிடிக்கின்றன. தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றன. அதன் நுகரும் தன்மையில் காணப்படுகின்ற வித்தியாசத்தின் வழியாக பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக்காண்பிக்கின்றன.
அதுபோலவே, தற்போது உலகையே பிடரியில் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸையும் நாய் மோப்பம் பிடிக்குமா – என்பது விஞ்ஞானிகளின் கேள்வியாக அமைந்தது. அந்தக்கேள்விக்கு போவதற்கு முன்னர், கொரோனா வைரஸிற்கு மணம் உள்ளதா? மனிதனின் கண்களுக்கு தெரியாத வைரஸினது மணம் எப்படியானது?
இவ்வாறு பல்வேறு கேள்விகளின் ஊடாக ஆராய்ச்சிகளை நடத்தத்தொடங்கிய விஞ்ஞானிகள் கொரோனா வாசத்தை நாய்கள் முகர்ந்தறியும் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.
நாய்கள் ஏற்கனவே பல முக்கிய நோய் அறிகுறியுள்ளவர்களை எவ்வாறு கண்டறிகிறதோ,அதேபோல கொரோனா தொற்றுள்ளவர்களையும் முகர்ந்தறியும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
நாய்களால் சில புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை முகர்ந்தறியமுடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, சில நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டங்கள், மூளை நோய்களின் அறிகுறிகளும் நாய்களின் மோப்ப சக்தியினால் உறுதிப்படுத்தமுடியும்.
இதைப்போல, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களையும் முகர்ந்தறிய முடியும் என்பது அதிசயமான ஆனால், உண்மையான செய்தி.
சிலி, ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பிரேஸில் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நாய்களின் மோப்ப சக்தியுடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை கண்டுபிடிக்கமுடிவதாக உறுதிசெய்துள்ளார்கள். அந்நாடுகளிலுள்ள கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு விமானநிலையங்களில் இந்த கொரோனாவை கண்டறியும் நாய்கள் விசேடமாக பயிற்றுவிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
பிரான்ஸிலுள்ள மிருக ஆராய்ச்சி மையம் இந்த விடயத்தை மேலும் அறுதியும் உறுதியுமாக கூறியுள்ளது. அதாவது, இவ்வாறு கொரோனா தொற்றினை அறிவதற்கு பயன்படுத்தப்படுகின்ற மோப்ப நாய்களின் மூலம் கண்டறியப்படும் அவதானிப்புக்கள் நூறு வீதம் நேர்த்தியாக காணப்படுவது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
அப்படியானால், இந்த கொரோனா தொற்றை கண்டறியும் நாய்கள் ஆஸ்திரேலியாவில் எப்போது அறிமுகமாகப்போகின்றன என்ற கேள்வி பல்வேறு மட்டங்களில் எழுந்துள்ளது.
ஏனெனில், எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் செய்கின்ற வேலையை – எத்தனையோ உபகரணங்கள் கொண்டு உறுதிப்படுத்தவேண்டிய பணியை – இந்த மோப்ப நாய்கள் சிம்பிளாக செய்துமுடிக்கின்றன என்றால், அதனை வேகமாக அறிமுகப்படுத்துவதும் “புதிய கண்டுபிடிப்புத்தானே”
ஆஸ்திரேலியாவில் “ஜேர்மன் செப்பேர்ட்”எனப்படுகின்ற நாய் இனத்தை இவ்வாறு கொரோனா மோப்பத்துக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாய்களை இப்படியானதொரு பணிக்கு பயன்படுத்துவது என்பது மிக முக்கியமானதும் – நேர்த்தியானதும் – அவதானதுமான – வேலை என்பதால்,அதற்காக மிக நுட்பமாக படிமுறை நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மோப்ப நாய்களாக பயிற்றப்பட்ட நாய்களை, நோய் கண்டறியும் புதிய மோப்பத்துக்காக பயிற்றுவிப்பது என்பது கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு வார பயிற்சி வேலை. ஆனால், மோப்ப நாய்களாக பயிற்றுவித்து, பின்னர் அவற்றை கொரோனா தொற்று கண்டறியும் நாய்களாக பயிற்றுவித்துக்கொண்டுவருவது என்பது கிட்டத்தட்ட மூன்று முதல் ஆறு மாத பணி.
மோப்ப நாய்களை பயிற்றுவிப்பதற்கு விசேட பயிற்சியாளர்கள் உள்ளார்கள். அவர்கள்தான் இந்த நாய்களோடு தொடர்ச்சியாக கலந்து கரைந்துநின்று பயிற்சியை செய்து, அதன் பெறுபேறுகளை உறுதிசெய்யவேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இந்த கொரோனா மோப்ப நாய்களை பயிற்றுவிப்பதற்காக சுகாதார தரப்பினரிடம் கொரொனா பொஸிட்டிவினால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் மற்றும் கொரோனா நெகட்டிவ் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மாதிரிகள் இரண்டையும் இந்த நாய் பயிற்றுவிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள். பல்வேறு மாதிரிகளுடன் பழகவிடப்பட்டு அவற்றின் மூலம் நூறு சதவீதம் சரியான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் நாய்களை பணிக்கு கொண்டுவருவதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பித்தள்ளதாக கூறப்படுகிறது.
இதிலுள்ள மிகமுக்கியமான விடயம், இந்த மோப்ப நாய்கள் சாதாரண இன்புளுவன்ஸா மற்றும் காய்ச்சல் குணமுடையவர்கள், அறிகுறிகள் உள்ளவர்களையும் கொரோனா தொற்றுள்ளவர்கள் என்று உறுதிசெய்துவிடக்கூடாது. கொரோனா தொற்றுள்ளவர்கள் என்று நூறு சதவீதம் புறம்பான அறிகுறிகள் கொண்டவர்களை மாத்திரம்தான் மோப்பம் பிடிக்கும் நாய்களாக இவைகள் பயிற்றுவிக்கப்படவேண்டும். இதற்காக மிக நேர்த்தியான பயிற்சிகள் இந்த நாய்களுக்கு வழங்கப்படவேண்டியிருக்கின்றன.
இதேவேளை, இந்த மோப்ப நாய்கள் கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிய பயன்படுத்துவது பாதுகாப்பானதா? நாய்களுக்கு கொரோனா வந்துவிடாதா? அல்லது இவ்வாறு மோப்பமிடும் நாய்களின் வழியாக ஏனயைவர்களுக்கு கொரோனா பரவாதா என்பது முக்கியமான– அவசியமான – கேள்விகள்.
உலகளாவிய ரீதியில் இதுவரை இரண்டு நாய்களுக்கு கொரேனா தொற்று உண்டாகியுள்ளது என்பதும் அவை அவற்றின் உரிமையாளர்களால் பரவியிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாய்கள் கொரோனாவினால் நோய்வாய்ப்படவில்லை.. வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
அதுபோல், மனிதர்களை முகருகின்ற நாய்கள், இன்னொருவரை முகர்ந்துகொள்ளும்போது, அவற்றின் மூக்கின் நுனியிலிருந்து வைரஸ் பரவலடைவதை தடுப்பதற்காக, இந்த விசேட மோப்ப நாய்களுக்கு சில்வர் கூம்பு அணிவித்து மோப்பம் பார்ப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அப்படியான நிலையில், நாயின் மூக்கு யாரின் மீதும் தொடுதலை ஏற்படுத்ததாது. குறிப்பிட்ட சில்வர் கூம்பின் வழியாக மனிதர்களிலிருந்து வருகின்ற வைரஸ் வாசத்தை கண்டறிவதற்கு ஏற்றவகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன என்று இந்த மோப்பநாய் பயற்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும்,இந்த நாய்கள் தொடர்ச்சியாக மருத்துவ ரீதியாக சோதனை செய்யப்படுவது இந்த மோப்ப நடவடிக்கையில் இன்றியமையாதது. இவற்றின் இரத்தச்சோதனை, சுத்தமாக பேணுவது போன்ற பல விடயங்களில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது பல்லாயிரக்கணக்கில் கொரோனா சோதனைகள் நடைபெறுகின்றன. அவை நிறைவடைந்து – கட்டுபாடுகள் நீங்கி – மக்களின் இயல்புவாழ்க்கை திரும்போது,இந்த கொரோனா மோப்ப நாய்களின் பணி மிகப்பெரியளவில் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானநிலையத்தில் மாத்திரமல்லாமல், பொது இடங்கள், பெருமளவில் மக்கள் கூடுகின்ற பிரதேசங்களில் இந்த நாய்களின் பணி பலரது பாதுகாப்பினை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.
மனிதன் செயற்கையாக உருவாக்கும் எல்லாவற்றுக்கும் இயங்கையிடம்தான் மருந்திருக்கிறது என்பதற்கு இந்த மோப்ப நாய்கள் இன்னொரு உதாரணம்.