உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிடம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் ரஷ்யா, சுட்டு வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.
2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ரஷ்யா பல டஜன் வடகொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியுள்ளது. இருப்பினும், வடகொரிய ஏவுகணைப் படைகளையே நேரடியாகக் களமிறக்குவது என்பது மொஸ்கோ மற்றும் பியோங்யாங் இடையிலான ஏற்கனவே விரிவடைந்துள்ள ராணுவ உறவின் அடுத்தகட்ட வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் வொரோனேஷ் (Voronezh) பகுதியில் உள்ள 112-வது ஏவுகணைப் படைப்பிரிவுக்குள் சுமார் 90 வடகொரிய வீரர்களைக் கொண்ட இந்த ஏவுகணைப் படைப்பிரிவை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் முதன்மை உளவுத்துறை இயக்குநரகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரி செர்னியாக் (Andrii Cherniak) தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் மீண்டும் வடகொரிய ஏவுகணைகளின் தாக்குதல்
வடகொரியா ஏற்கனவே 40 புதிய KN-23 மற்றும் KN-24 ஏவுகணைகளையும், பணியாளர்களையும் ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது.
இருப்பினும், இந்த ஏவுகணைப் படைப்பிரிவின் முழுமையான கட்டமைப்பு மற்றும் மொத்த ஏவுகணைகளின் எண்ணிக்கை ஆகியவை அடுத்த மாதம் நடைபெறவுள்ள உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
இந்த படைப்பிரிவில் 120 வடகொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளும் ஆறு ஏவுதளங்களும் இடம்பெறும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது. இருப்பினும், ரஷ்யாவின் ஏவுகணை நடவடிக்கைகளில் வடகொரியர்கள் என்ன மாதிரியான துல்லியமான பங்கைக் கொண்டிருப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, உக்ரைன் மீது வடகொரியாவின் இரண்டு ஏவுகணைகளை ரஷ்யா கடந்த வாரம் ஏவியிருந்த நிலையிலேயே, இந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
உக்ரைனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்காக வடகொரியா மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளை வழங்கியுள்ளதுடன், 2024-இல் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்க 14,000 வீரர்களையும் அனுப்பியது.