ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) "அமெரிக்க நிலப்பரப்பு" என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப்,
"நாம் வெற்றி பெற்றுவிட்டோமா என்று கூட நமக்குத் தெரியவில்லை. ஏனெனில், ஹோர்முஸ் நீரிணையை நான் இப்போது ஒரு அமெரிக்க நிலப்பரப்பாகவே பார்க்கிறேன்" என்று கூறினார்.
மறைந்த செனட்டர் லிண்ட்சி கிரகாமின் வெற்றிடத்தை நிரப்பப் போட்டியிடும் டார்லின் கிரகாமிற்கு ஆதரவாகவே அவர் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஈரான் மீது குண்டுவீச்சு நடத்துவது குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.
"இன்று வெள்ளிக்கிழமை இரவு, நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. நான் மீண்டும் சென்று ஈரான் மீது இன்னும் கொஞ்சம் குண்டுகளை வீச வேண்டுமா?" என்று வினவினார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவின் கடல்சார் முடக்கத்திற்கு கட்டுப்படும் வகையில் 68 வணிகக் கப்பல்களின் பாதைகளை அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) மாற்றி அமைத்துள்ளதாகத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
போர் ஆறு மாதங்களை நெருங்கும் நிலையிலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமைதி உடன்பாட்டை எட்டுவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய நீர்வழியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணைக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அந்நாட்டைப் பொருளாதார ரீதியாக முடக்க ட்ரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.
உலகளவில் கடல்வழியாகக் கொண்டு செல்லப்படும் எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு, ஈரான் மற்றும் ஓமானை எல்லையாகக் கொண்ட இந்த குறுகிய நீர்வழிப் பாதை வழியாகவே செல்கிறது.
கடந்த வாரமும் இந்த நீரிணையை அமெரிக்க நிலப்பரப்பாக அறிவிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
"அடிப்படை ரீதியில் அதுதான் உண்மை. நம்மிடம் கடல்சார் முடக்கம் உள்ளது. நாம் விரும்பினால் ஒழிய எந்தக் கப்பலும் அதைக் கடக்க முடியாது" என நியூயோர்க் பொலிஸ் அகாடமியில் இடம்பெற்ற நிகழ்விலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நீர்வழிப் பாதையை "புதிய அமெரிக்க நிலப்பரப்பு" என அடையாளப்படுத்திய வரைபடம் ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) "வெறும் மாயை" எனக் கூறி நிராகரித்துள்ளார்.