அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரசாரக் கூட்டத்தில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விளம்பரப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட உரை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து , பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுர கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை விளம்பரப்படுத்தும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறி சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர்.
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்களே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை உள்ளடக்கிய அரசியல் ஒப்பீடு ஒன்றை மேற்கொண்டு உரையாற்றுகையில், அர்ச்சுனா எம்.பி. தன்னைப் "புலி" எனக் குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷ, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல எதிர்கட்சி அரசியல்வாதிகள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.