கோகுலன், சிட்னி
"சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகநீதி." இந்த மூன்று வார்த்தைகளை இந்தியச் சூழலில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிக முக்கியமான இடத்தில் நாம் வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், கடல் கடந்து அயல்நாட்டில் குடியேறிய நாட்டில் இந்த வார்த்தைகளின் தேவை என்ன? முக்கியத்துவம் என்ன? அதுவும் வளர்ந்த நாடு எனக் கருதப்படும், அழகிய தீவுக் கண்டமாகிய ஆஸ்திரேலியாவில் இம்மூன்று வார்த்தைகள் எதற்காக பேசப்படுகின்றன? என்ற கேள்விகளை முன்வைத்து, யார் இதைப் பற்றி இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று விவாதிப்பதை இந்தக் கட்டுரை பதிவு செய்யும் என நம்புகிறேன்.
தெற்காசியாவை விட்டு மேற்கத்திய நாடுகளில் குடிபெயரும் மக்கள் தங்கள் மதங்கள், மரபுகள், பழக்கவழக்கங்கள், உடை, உணவு, இசை, நடனம், மொழி மற்றும் இலக்கியம் எனப் பலவிதமான கலாசார அடையாளங்கள் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை தங்களுடன் எடுத்துச் சென்று நடைமுறைப்படுத்துகின்றனர். ஆஸ்திரேலிய நாடு பல்லினக் கலாசாரங்களை மையமாகக் கொண்ட சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்புவதுடன், புதிதாகக் குடிபெயர்நத மக்கள் தங்களின் தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இவ்வாறு பல நல்ல சமூகக்கூறுகளை இறக்குமதி செய்திருக்கும் ஆஸ்திரேலிய நாடு, புலம்பெயர் மக்களிடையே புரையோடியிருக்கும் சில தீய கூறுகளையும் கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதில் சில முக்கியமான பிரச்சினைகளாக ஏதிலிகளுக்கான விசா உரிமைகள், நிறவெறி மற்றும் இனவெறி சம்பந்தமான வேற்றுமைகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி போன்றவைகளும் அடக்கம். தற்பொழுது தெற்காசிய மக்களிடம், குறிப்பாக தமிழர்களிடம் பெருவாரியாக பழக்கத்தில் இருக்கும் சாதிய வேறுபாடும், அது சம்பந்தமான தீண்டாமையும் இந்த இனவெறி மற்றும் நிறவெறிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய காலகட்டத்தை நாம் அடைந்திருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
ஆம் நண்பர்களே, இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் என இந்து மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளாக அறியப்பட்ட சாதிய வேற்றுமைகள், தற்பொழுது வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த மக்களிடையே பெரும் வருத்தங்களை விளைவிக்கின்ற, நுண்ணிய ஆழத்தில் நிகழும், பூதாகரமான அளவை அடைந்துள்ளது.
கருத்தியலும், அமைப்பாதலும்:
மேற்சொன்னவை அனைத்தும் சமூகப் பிரச்சினைகள்; தனிப்பட்ட ஒரு சாராரின் பிரச்சினை அல்ல. இதன் விளைவுகள் விரிந்து பரவும் தன்மை கொண்டவை. இத்தகைய சூழலில்தான், நம் மக்கள் தங்களது கருத்தியலைச் சீர்தூக்கிப் பார்க்கவும், சமூகச் சிந்தனை உடைய நண்பர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, சமூகப் பிரச்சினைகளை விவாதித்து ஒரு அமைப்பாகச் செயற்படவும் மிகுந்த தேவை உள்ளது.
நவீன காலத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சமாளித்து, பாகுபாடுகளைக் குறைத்து, உரிமைகளை நிலைநாட்ட, சரிசமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒரு சமத்துவ சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் மீண்டும் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் மற்றும் சட்டமேதை 'அண்ணல்' அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளைக் கருத்தியல் கருவாக ஏற்று, தற்காலத்திற்கு ஏற்ப சமூகநீதி செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டி, "பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்" என்ற அமைப்பு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் சமூகநீதி சிந்தனை கொண்ட நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து வட்ஸப் குழுவாக கருத்துக்களைப் பகிர்ந்து வந்தார்கள். காலத்தின் கட்டாயம் கருதி, சிந்தனைகளைச் செயல்படுத்தும் பொருட்டு, 'பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்' என்கிற பெயரில், முறையாகப் பதிவு செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறார்கள்.
திராவிட இயக்கமும், தலித்தியமும்:
பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகள் என்று சொல்லிவிட்டு, திராவிடம் மற்றும் தலித்தியம் என்கிற வலிமை மிக்க வார்த்தைகளைப் புறக்கணித்தல் ஆகாது.இன்றைய காலகட்டத்தில், திராவிட இயக்கமும் தலித்தியமும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றை பெரியார் வலியுறுத்தினார்.
பி.ஆர். அம்பேத்கர் தலித்தியத்தின் முன்னோடி மட்டுமல்ல, அவர் இந்திய அரசியல் களத்தில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனி ஆளாகப் போராடினார். அவர் தலித் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எனவேதான், பெரியாரும் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். இருவரும் சாதி ஒழிப்பு, சமத்துவம், மற்றும் சமூக நீதிக்காகப் போராடியதால், அவர்கள் கருத்துகள் மற்றும் செயற்பாடுகள் ஒரே நோக்கத்தைக் கொண்டிருந்தன.
நல்ல ஆரம்பம்:
PATC-A அமைப்பின் தொடக்க விழா இணைய வழியாகவும், சிட்னி நகரில் ஒரு சிறிய விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாதி ஒழிப்பு, சமத்துவம் மற்றும் சமூகநீதி என்கிற இலக்கை நோக்கிப் பயணிக்கும் திராவிட இயக்க, தலித்திய இயக்க மற்றும் இன்னபிற கருத்தியல் தளத்தில் பயணிக்கும் பல நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத்தின் தலைவர் திருமிகு. ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமிகு டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களும் இணைய வழியாகத் தலைமை உரை ஆற்றினார்கள். சாதி ஒழிப்பில் நாம் எட்ட வேண்டிய தூரம் நீண்ட கடினமான பயணம் என்பதையும், வலதுசாரி பிரிவினைவாதிகள் நடத்தும் தாக்குதல்களைப் பற்றியும், அடுத்த தலைமுறையினரை நாம் சமத்துவம் நிறைந்த, சரிசமமான வாய்ப்புகள் கிடைக்கின்ற சமூக மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தங்களது உரைகளில் விளக்கினார்கள்.
திராவிடர் கழகத்தின் போர்வாள், வழக்கறிஞர். திருமிகு. அருள்மொழி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஆஸ்திரேலியாவில் கிரீன்ஸ் கட்சியின் மூத்த உறுப்பினர், மனித உரிமைப் போராளி மற்றும் முன்னாள் சென்ட்டர் திருமிகு. லீ ரையானன் அவர்களும் முக்கியமான உரையாற்றினார். மதுரையின் மைந்தன் எழுத்தாளர் திருமிகு. அ. முத்துக்கிருஷ்ணன் அவர்களும் தனது இணையவழி வாழ்த்துரையில், சாதியை நம் சமூகத்தில் இருக்கும் ஒரு நோய் விளைவிக்கின்ற வைரஸ் என்கிற உவமையில் விளக்கினார். சிட்னியில் வசிக்கும் ஈழத்தமிழர் லேபர் கட்சியின் முக்கியமான தமிழ் உறுப்பினர் மற்றும் விரிவுரையாளர் திருமிகு. துர்கா ஓவன், கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் திருமிகு. இரவிச்சந்திரன் அரவிந்தன் அவர்கள், சிட்னியின் முக்கியமான ஊடகவியலாளர் திருமிகு. ரைசல் அவர்கள் மற்றும் எழுத்தாளர் திருமிகு. கார்த்திக் வேலு அவர்கள், சிட்னிவாழ் ஈழத்தமிழர் மற்றும் கம்பர்லேன்ட் கவுன்சில் கிரீன்ஸ் கட்சி வேட்பாளர் திருமிகு. சுஜன் செல்வன், சிட்னிவாழ் தொழில்முனைவோர் திருமிகு. கார்த்திகா அவர்கள், சிட்னியில் வசிக்கும் கண்டியைப் பூர்வீகமாகக் கொண்ட மலையகத்தமிழர் திருமிகு. சுந்தர் அவர்கள் மற்றும் பல முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய சாதனை:
ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை (PATC-A) வட்டத்தின் நிர்வாகக் குழுவினர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒரு பெரும் பணியை அறிவுசார் தளத்தில் சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க என்று வெறும் பேச்சில் மட்டும் கூச்சல் இல்லாமல், சாதிய அடக்குமுறைகளை ஆஸ்திரேலிய பல்லின மக்களுக்குப் எவ்வாறு புரிய வைப்பது?, ஏற்கனவே கலாசாரம், ஆன்மீகம் என்கிற போர்வையில் உலாவரும் சாதிய பழக்கவழக்கங்களை, தினசரி வாழ்வியலில் ஊடுருவி நிற்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை எவ்வாறு வெளிச்சத்திற்கு கொண்டுவருவது?, மேலும் நிறவெறி மற்றும் இனவெறி குற்றங்களுக்கு எதிரான சட்டங்களில் சாதிய அடக்குமுறைகளை எவ்வாறு இணைப்பது? என்று பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகளையும் மற்றும் கலந்துரையாடல்களையும் கடந்த ஆண்டில் நடத்தினார்கள்.
அதன் விளைவாக, Federation of Ethnic Communities Councils of Australia என்கிற அமைப்புடன் இணைந்து, ஆஸ்திரேலிய அளவில் இனவெறிக்கு எதிரான தேசியக் கட்டமைப்பில் (National Anti Racism Framework) சாதிய அடக்குமுறைகளை சேர்ப்பதற்கான முயற்சியில், சிட்னிப் பகுதியில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, சமூகவியல் ஆராய்ச்சி துறையில் வேலை செய்யும் பேராசியர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அளித்தனர்.
இந்தியா மட்டுமல்லாது, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை முக்கியத்துவம் வாய்ந்தது.
தொடரும் பிரதான பணிகள்:
1. ஆஸ்திரேலிய அளவில் சாதிய அடக்குமுறை பற்றிய விழிப்புணர்வு, .
2. பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு, கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவது,
3. சமூகத்தில் உள்ள கலாசாரம் சார்நத பிரச்சினைகள், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் பற்றி விவாதிக்கவும், தீர்வுகளைக் கண்டறியவும் கலந்துரையாடல்களை ஒருங்கிணைப்பது,
4. சாதிய அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுக்க, சட்ட ரீதியான வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து தீர்மானங்களை ஏற்படுத்த வழிவகுப்பது,
என்று, புலம்பெயர்ந்த மக்களிடையே சாதிய அடிப்படையிலான பாகுபாடுகளைக் குறைத்து, சமத்துவமான சமூகத்தை உருவாக்க தங்களது பங்களிப்பை ஆஸ்திரேலியாவின் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகநீதி பெறுவதற்கான பாதையில் ஒரு சமூக மாற்றம் நம்மிடையே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.
மனிதம் ஓங்குக!
சுயமரியாதை வளர்க!
ஆதிக்க மனப்பான்மை ஒழிக!
தமிழ் வெல்க!!