“ அவருடைய வாழ்வில் அவர் எவ்வித சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை. அவர் பிள்ளைகளுடன் கூடியாடித் திரிய எங்கட நாடும் அவரை அனுமதிக்கவில்லை”- இவ்வாறு அண்மையில் உயிரைவிட்ட சசிகரனின் மனைவி தனது கவலையை எதிரொலியிடம் வெளியிட்டார்.
இம்மாதம் முற்பகுதியில் விக்டோரியாவின் தென்கிழக்கு பகுதியில் டவுன்டன் பகுதியில் வாழ்ந்து வந்த சசிகரன் என்ற 44 வயது அகதிக் கோரிக்கையாளர் மறைந்து போனார். அவரின் மனைவியே மேற்கண்டவாறு தமது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களில் பலர் நிரந்தர வதிவிட விசா மற்றும் குடும்பங்களின் பிரிந்து மனவேதனையுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் துயர் மிக்க வாழ்க்கையில் தங்களது உயிரை பிடித்தவாறுள்ள அகதிகளுக்கு மத்தியில் சிலர் மடிந்து கொண்டிருக்கும் நிலை ஆஸ்திரேலியாவில் நீடித்துவருகின்றது.
இவ்வாறான நிலையில தான் அகதிகள் தங்களுக்கான நிரந்தரத் தீர்வைத் தருமாறு வலியுறுத்தி 24 மணிநேரப் போராட்டத்தை சிட்னி , மெல்பேர்ண், அடலைட் , பேர்த் மற்றும் பிறிஸ்பேன் ஆகிய நகரங்களில் முன்னெடுத்து வருகின்றனர். மெல்பேர்ணில் ஆரம்பித்த இந்தப்போராட்டம் 60 நாள்களை கடந்துள்ள காலப்பகுதியில் மூன்று அகதிகளின் உயிர்கள் பிரிந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெரியதம்பி உதயகரன் புத்தளத்தை சேர்ந்த மனோ மற்றும் வவுனியாவை சேர்ந்த சசிகரன் ஆகியோரே அகதிக்கோரிக்கையுடன் நீண்ட கால நிரந்தர வாழ்வுக்காக போராடி மாண்டவர்கள்.
இவ்வாறு உயிரிழந்த சசிகரனின் மனைவி மேனகா, தனது கணவனின் மரணம் குறித்து எதிரொலியிடம் தெரிவித்த விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
“ 2012 ஆம் ஆண்டு எனது கடைசி மகன் வயிற்றில் இருக்கும் போது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். எங்களுக்கு மூன்று பிள்ளைகள். அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நாள் முதல் எங்களை எடுக்கவேண்டும், நிம்மதியான நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தார்.
எனது கடைசி மகன் தகப்பனை நேரிலேயே பார்த்தது கிடையாது. எனது கணவரின் உடலை நாங்கள் எங்கட வீட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கோருகின்றோம். ஏனெனில் எங்கள் பிள்ளைகள் அவரின் உடலை தொட்டு தந்தையை உணரவேண்டும் என்பது என் அவா.” என்று கதறிய குரலோடு அவருடைய பிரிவின் வலியை சொல்ல தொடங்கினார் மேனகா.
“ எனது கணவர் தன்னுடைய வாழ்நாளில் எந்த வித சந்தோஷங்களையும் அனுபவித்தது கிடையாது. அவரின் இறுதி நாள்வரை அவர் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்பது பேரவா. அது இறுதிவரை நடக்கவே இல்லை. அதை நான் இனி எப்படி நிறைவேற்றுவேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலியாபோன நாள் முதல் அவர் எப்போதும் வீடியோ கோலில் தான் பேசுவார். பிள்ளைகளின் குறும்புத்தனங்களை எப்போதும் ரசித்துக் கொண்டேயிருப்பார்.” என்று கூறிக்கொண்டிருக்கும் போது தொலைபேசியில் அழுகை மட்டும் வந்துகொண்டிருந்தது.
“ அவருடன் இறுதிநாள் கதைக்கும் போது கூட சொன்னார், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றம. விசா வந்து விடும் .உங்களை எடுத்துப்போடுவேன் என்றார். ஆனால் விடியகாலையில் இடிவிழுந்த செய்திதான் கேட்டது” என சொல்லிக்கொண்டிருந்த மேனகா ’எனது கணவரின் உடலை எப்படியாவது எங்களிடம் அனுப்பிவிடுங்கோ’ என்று கண்ணீர்க் கோரிக்கையுடன் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
“ தனது குடும்பத்தை நினைத்து எப்போதும் அழுவதும் பேசுவதுமாகதான் இருப்பார். அவரின் இந்நிலையை பார்த்து நான் அவரை மனநல வைத்தியரிடம் கூட்டியும் சென்றுள்ளேன். அவர் மனநல வைத்தியரின் ஆலோசனையை பெற்றும் வருகிறார். அதுமட்டும் இல்லை அகதிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு போகவேண்டும், அவர்களுக்கான உணவை வழங்கவேண்டும் என்று அடிக்கடி கூறிவருவார். இந்த நிலையில் தான் அவரின் முடிவு இப்படி நடந்தேறியது” – என்று மெல்பேர்ணில் உள்ள அவரது நண்பரான சத்து தெரிவித்தார்.
சசியின் சாவை முந்திக்கொண்டு சென்ற மனோவின் அம்மாவும் எதிரொலியிடம் பகிர்ந்தவற்றையும் நாம் உங்கள் முன் வைக்கின்றோம்.
“மட்டக்களப்பு தில்லுமலையில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வந்தோம். இந்நிலையிலேயே கணவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களுக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுடன் சேர்ந்தே நாங்கள் இங்கு வந்தோம். அப்போது மனோவுக்கு வயது 11. அவருக்கு அறிவு வந்த காலம் முதல் அவர் கேட்கும் ஒரு கேள்வி ஏன் நாங்கள் இங்கு வந்தோம்? ஏன் இப்படி விசா இல்லாமல் இருக்கிறோம் என்பது அவருடைய கேள்வியாகவே எப்போதும் இருக்கும்.
இறக்கும்போது அவருக்கு வயது 23. அவருக்கு ஒன்றரைவயதில் ஒரு குழந்தையும் உள்ளது. வருட இறுதிக்காலத்தில் விசா இருந்தால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்றே எனக்கு அவன் சொல்வான். விசா கிடைக்கவேண்டும் என்று தான் அவன் போராட்டத்திற்கும் அடிக்கடி செல்வான். அவனுடய எல்லாப் பிரச்சினையையும் இப்படி இறக்கி வைப்பான் என்ற எனக்குத் தெரியாது – என்று தழுதழுத்த குரலுடன் கூறினார் மனோவின் அம்மா.
இவ்வாறான அகதிகளின் தொடர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், ஏதிலிகளின் திறந்த வெளி சிறையை உடைத்தெறிய அனைத்து தரப்பின் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டியது வரலாற்றுக்கடமை.