இலங்கைக்கு பைசர் நிறுவனம் வழங்கியுள்ள உறுதிமொழி
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
இலங்கைக்கு இவ்வருடத்துக்குள் 5 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அமெரிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன்முதற்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டுக்கு வரவுள்ளன – என்று ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கைக்கு வரவுள்ள தடுப்பூசிகள் தொடர்பான விபரத்தையும் இதன்போது அவர் வெளியிட்டார். அவர் கூறியவை வருமாறு,
” சீனாவிடமிருந்து ஜுன் 06 ஆம் திகதி 10 லட்சம் தடுப்பூசிகளும், அதன்பின்னர் ஜுன் 09 ஆம் திகதி மேலும் 10 லட்சம் தடுப்பூசிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.
14 மில்லியன் ஸ்புட்னிக் – பை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு ரஷ்ய நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது ஒரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம். இதன்படி இவ்வருடத்துக்குள் இலங்கைக்கு 5 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஜுலை மாதத்தில் 3 அல்லது 4 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.
அத்துடன், சினோ வெக் மற்றும் ஜொன்ஸ்டன் என்ட் ஜொன்ஸ்டன் தடுப்பூசிகளை பெறுவதற்கான பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றன.” – என்றார்.
Related Posts