வடக்கில் 15 நாட்களில் 6,667 பேருக்கு கொரோனா

banner

வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 6 ஆயிரத்து 667 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.





அதாவது, வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.





சுகாதாரத் துறையின் நேற்றைய (வியாழக்கிழமை) அறிக்கையின் படி, நேற்று முன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 25 தொற்றாளர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





இதற்கிடையில் வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.





கடந்த 2020 மார்ச் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,634 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.





இதில், அதிகப்படியாக யாழ்.மாவட்டத்தில் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 356 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.