எல்லை தாண்டிய மீனவர்களுக்கு 8 ஆம் திகதிவரை மறியல்!

banner

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.





தமிழகம் காரைக்கால் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களும் , மயிலாடுதுறையை சேர்ந்த 7 மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி காரைக்காலில் இருந்து படகில் கடற்தொழிலுக்காக புறப்பட்டுள்ளார்கள்.





குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.





விசாரணைகளின் பின்னர் கடற்படையினர் மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர்.





அதனை அடுத்து மன்று அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.