ஓய்வூதியம் வாங்கவும் இராணுவமா? சபையில் சீறிய சிறிதரன்
Politics 2 ஆண்டுகள் முன்
"நாட்டில் தடுப்பூசி திட்டம்கூட இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்பு செய்யவேண்டிய விடயங்களை இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு பயணத்தடை செல்லுபடியாகாது. ஆனால் ஏழை மக்கள் பட்டினிசாவை எதிர்கொள்ளும் அபாயத்தில் வாழ்கின்றனர்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஶ்ரீதரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு மற்றும் வாழுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.நாட்டில் பொது முடக்கமும் இல்லை. ஊரடங்கும் அமுலில் இல்லை. பயணத்தடை என்கின்றனர். ஆனால் செல்வாக்கு உள்ளவர்களுக்கு பயணத்தடை பொருந்தாது. அப்பாவி மக்களே முடக்கப்பட்டுள்ளனர்.
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என்கின்றனர். ஆனால் ஒருவர் 3 ஆயிரம் ரூபா சமுர்த்தி பெற்றால் அரசால் 2 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆக 2 ஆயிரம் ரூபா கொடுக்கின்றனரா, 5 ஆயிரம் ரூபா வழங்குகின்றனரா என தெரியவில்லை.
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் பட்டினியின் விளிம்பில் இருக்கின்றனர். அமைச்சர்களோ, போரை முடித்த எங்களுக்கு இதெல்லாம் பெரிய விடயமல்ல என வீராப்பு பேசுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு 2 மாதங்களுக்கு முன்னரே வைத்திய சங்கமும், சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் வலியுறுத்தின. மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும்கூட இக்கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது தடுப்பூசி திட்டம்கூட அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் செய்யவேண்டிய விடயங்களை இராணுவமும், அரசியல்வாதிகளும் செய்கின்றனர். பென்சன் வாங்குவதற்குகூட இராணுவம்தான் அழைத்துசெல்லவேண்டிய நிலை. " - என்றார்.
Related Posts