தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராக பிள்ளையான் அரசியல் வேட்டை

banner

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே, மாகாண சபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்குக் காரணம்.





இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.





வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது எனத் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட செயற்பாடே இதுவரையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமைக்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.





மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்புத் திட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதி வழங்கும் நடவடிக்கை நேற்று நடைபெற்றது.





மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எம்.பி. பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.





தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட 33 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.