'இலங்கை வரலாற்றிலேயே இப்படி நடந்தது கிடையாது....'
Politics 2 ஆண்டுகள் முன்
" அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது என அரசு அறிவித்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது? இலங்கை வரலாற்றிலேயே ஒரே தடவையில் அதிகளவு விலை உயர்வு இடம்பெற்றுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே ஒரு தடவையில் சமையல் எரிவாயுவின் விலை இந்தளவுக்கு அதிகரிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதுமட்டுமல்ல பால்மா, கோதுமைமா, சீமெந்து உட்பட பல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பாரதூரமான விடயமாகும்.
கொரோனா பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. மக்கள்மீது சுமை திணிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது.
விலையை அதிகரிக்கும் அரசு, அதனை மக்கள் தாங்கிக்கொள்ள முடியுமா, எவ்வாறு சமாளிப்பார்கள் என சிந்திப்பதில்லை. மனிதநேயமற்ற முறையிலேயே செயற்படுகின்றது.
மக்களை பாதுகாக்கவே அவசரகால சட்டம் என்றனர். பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களை மீட்கவும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவுமே எனவும் குறிப்பிட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? மக்களை ஒடுக்குவதற்கு அந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
நாட்டை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நிர்வகிக்கவில்லை. வியாபாரிகளே இயக்குகின்றனர். இலங்கை வரலாற்றில் இப்படியொரு அரசு இருந்ததே இல்லை. அந்தளவுக்கு மக்களுக்கு வலி, வேதனையளிக்கினற்து. " -என்றார்.
Related Posts